Accused Movie press meet

 

நடிகர் உதயா நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு.

நடிகர்கள் உதயா – அஜ்மல் – யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது

பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஐ. மருதநாயகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன்-ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜேசன் ஸ்டுடியோஸ் – சச்சின் சினிமாஸ்- ஸ்ரீ தயாகரன் சினி புரொடக்ஷன் மற்றும் மை ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் உதயா – ‘தயா’ என். பன்னீர்செல்வம் – எம். தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

ஆகஸ்ட் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் பன்னீர்செல்வம் பேசுகையில், ”இப்படத்தின் பணிகளை இந்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் தேதியன்று தொடங்கி, ஆகஸ்ட் ஒன்றாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகிறோம். ஒரு படத்தை இவ்வளவு விரைவாக நிறைவு செய்து திரையரங்குகளில் வெளியிடுவதற்காக முழு ஒத்துழைப்பினை வழங்கிய நடிகர் உதயாவிற்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படத்தின் கதையை இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ், உதயா மூலமாக எங்களை சந்தித்து சொன்னார். அவர் சொன்ன கதை பிடித்துப் போனதால், அடுத்த நாளே படத்தின் பணிகளை பூஜையுடன் தொடங்கினோம். உதயாவை தொடர்ந்து கதையில் முக்கியமான வேடத்தில் நடிக்க நடிகர் அஜ்மல் மற்றும் யோகி பாபு ஒப்பந்தமானார்கள். இவர்களைத் தொடர்ந்து நாயகி ஜான்விகா, பவன், பிரபாகர், பெங்களூரூ டானி, சுபத்ரா என அந்தந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர்களை இயக்குநரும் உதயாவும் தேர்வு செய்தனர்.

குறிப்பாக யோகி பாபு தலைவர் ரஜினி படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது உதயாவிற்காக பதினான்கு நாட்களை ஒதுக்கி முழு ஒத்துழைப்பை வழங்கினார்.

ஒளிப்பதிவாளர் மருதநாயகம், இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, எடிட்டர் ஷ்யாம் என திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்கினார்கள். இவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்று பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகர் அஜ்மல் பேசுகையில், ”ஒருவர் வெற்றி பெற வேண்டும் என்று துணிந்து செயலில் ஈடுபட்டால், அவருக்கு இந்த உலகமே துணை நிற்கும் என்பார்கள். இதற்கு மிகப்பெரிய உதாரணம் உதயா. அவர் இந்த படத்திற்காக எவ்வளவு கடினமாக உழைத்தார் என்பதை படத்தின் பணிகள் தொடங்கிய முதல் நாளிலிருந்து எனக்குத் தெரியும்.

இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்களும் நடிகைகளும் தொழில்நுட்ப கலைஞர்களும் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து பணியாற்றினார்கள். இந்தப் படத்திற்கு கடவுளின் மிகப்பெரிய ஆசீர்வாதம் இருக்கிறது. அந்த ஆசி இன்று வரை தொடர்கிறது.

இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் என் கதாபாத்திரத்தை மட்டுமல்ல மலர் என்ற ஹீரோயின் கதாபாத்திரத்தையும் உதயாவின் கதாபாத்திரத்தையும் நன்றாக செதுக்கியிருந்தார். படத்தில் திறமையான தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றியிருக்கிறார்கள்.

‘அஞ்சாதே’ படத்தில் பணியாற்றிய போது எனக்கு ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்தது. ‘கோ’ படத்தில் பணியாற்றிய போதும் பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்தது அதேபோன்று பாசிட்டிவ் எனர்ஜி இந்தப் படத்தில் பணியாற்றிய போதும் எனக்கு கிடைத்தது. அதனால் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்தப் படத்திற்கு ஊடகங்களில் பேராதரவு தேவை. அதை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நாயகன் உதயா பேசுகையில், ”மூன்றரை வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அக்யூஸ்ட் ‘ திரைப்படத்தில் நடித்திருக்கிறேன்.
சினிமாவில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று வரை எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ஊடகங்களுக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மேடை எனக்கு மிகவும் பிடித்த மேடை. நிறைய போராட்டங்களுக்குப் பிறகு சினிமாவை நிறைய நேசித்ததன் காரணமாக இங்கு நின்று கொண்டிருக்கிறேன். கடந்த மூன்று ஆண்டு காலத்தில் மன உளைச்சலுக்கும் ஆளாகி இருக்கிறேன். அதன் பிறகு மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் பயணிக்க தொடங்கிய போது கேட்ட கதை தான் இந்த அக்யூஸ்ட் படத்தின் கதை.

இன்றைய தமிழ் சினிமாவில் கன்டென்ட் தான் முக்கியம். அதற்காக நல்ல கன்டென்டுக்காக காத்திருந்தேன். நான் இன்று வரை எந்த படமாக இருந்தாலும் தியேட்டருக்கு சென்று பார்த்து ரசிப்பவன். எது ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது, பிடிக்கும் என்பதனை உணர்ந்து அதற்கு ஏற்ற வகையில் தான் கதையை கேட்கத் தொடங்கினேன்.

இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் முதலில் கன்னடத்தில் வெளியான படம் ஒன்றை தமிழில் ரீமேக் செய்யலாம் என்று சொன்னார். அது டார்க் காமெடி, எனக்கு ஒத்து வராது என்று சொல்லி புதிதாக கன்டென்ட் இருந்தால் அதை சொல்லுங்கள் என்றேன் . அத்துடன் எனக்கான பட்ஜெட் இதுதான் என்றும் சொன்னேன். ஆனால் அவர் சொன்ன அக்யூஸ்ட் கதை பெரிய பட்ஜெட் படம். இதை தயாரிப்பாளரிடம் சொன்னபோது அவர்கள் தான் இதற்கு ஆதரவாக இருந்தார்கள். அதனால் தான் இந்த படம் உருவானது.

இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் கிளாரிட்டியான டைரக்டர். அவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரும் எதிர்காலம் இருக்கிறது. அத்துடன் பிரபு ஸ்ரீநிவாஸ் தயாரிப்பாளர்களின் இயக்குநராகவும் இருக்கிறார்.

இந்தப் படத்தினை பத்திரிகையாளர்களாகிய நீங்கள் பார்த்து பாராட்டு தெரிவித்து விட்டால், தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டு வெற்றி பெற செய்து விடுவார்கள்.

இன்றைய சூழலில் ஒவ்வொரு படத்திற்கும் விமர்சனம் அவசியம் தேவை. சினிமாவிற்கு மூன்று நாட்கள் விமர்சனம் தேவையில்லை என்று சொன்னாலும் கூட சினிமா என்றால் விமர்சனம் வரத்தான் செய்யும். அதனால் ஒவ்வொரு சினிமாவிற்கும் விமர்சனம் அவசியம் தேவை தான். அவை ஆரோக்கியமாக இருந்தால் நன்றாக இருக்கும். சம்பந்தப்பட்ட கலைஞர்கள் தங்களது தவறை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பு உருவாகும்.

இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் என் குடும்பத்தை போன்றவர்கள் தான். அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிகழ்விற்கு வருகை தந்த எடிட்டர் ஷியாம், எஸ்கியூடிவ் புரொடியூசர் சிவசங்கரன், இயக்குநர் ராஜா, நடிகர்கள் பெங்களூர் டானி, பிரபாகர், இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், ஹீரோ அஜ்மல், ஹீரோயின் ஜான்விகா, தயாரிப்பாளர் – தம்பி பன்னீர்செல்வம், தயாரிப்பாளர் – தம்பி சேது, நடிகை சுபத்ரா, ஒளிப்பதிவாளர் மருதநாயகம், ரங்கோலி படத் தயாரிப்பாளர் சதீஷ், தயாரிப்பாளர் -‌ நடிகர் டி. சிவா ஆகியோருக்கும் நன்றி.

இந்த படத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, யோகி பாபு, எடிட்டர் பிரவீண் , இயக்குநர் பிரபு சாலமன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திரைப்படம் 2 மணி நேரம் 10 நிமிடம் வரை ரசிகர்களை உற்சாகமாக வைத்திருக்கும். படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. நல்ல கன்டென்ட், நல்ல படமாக வழங்கியிருக்கிறோம். நீங்கள் பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இதனிடையே இந்நிகழ்வில் சண்டை கலைஞர் எஸ் மோகன்ராஜ் – மூத்த நடிகை சரோஜாதேவி – இயக்குநர் வேலு பிரபாகரன் ஆகியோரின் மறைவிற்கு உதயாவின் வேண்டுகோளை ஏற்று ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Response