Pagalariyaan Movie Review

Pagalariyaan Movie Review:

நடிகர் வெற்றி தனது எதார்த்தமான நடிப்பால் வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அவரது நடிப்பில் இன்று வெளியாகி உள்ள படம் பகலறியான். நாயகனாக நடித்திருக்கும் வெற்றி கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கச்சிதமாக கொடுத்திருக்கிறார். அவரது இறுக்கமான முகமும், நடிப்பும் அவர் நல்லவரா? கெட்டவரா? என்ற எண்ணத்தை ரசிகர்கள் மனதில் ஏற்படுத்துவதோடு, திரைக்கதைக்கும் பலம் சேர்த்திருக்கிறது.

முருகன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் வெற்றி, அக்ஷயா கந்தமுதன், சாப்ளின் பாலு, சாய் தீனா, முருகன், வினு பிரியா ஆகியோர் நடித்துள்ளனர். ரிஷிகேஷ் என்டர்டைன்மென்ட் பேனரில் லதா முருகன் இந்த படத்தை தயாரித்துள்ளார். விவேக் சரோ இசையமைக்க, அபிலாஷ் ஒளிப்பதிவு செய்ய, குரு பிரதீப் எடிட்டிங் செய்துள்ளார். விக்னேஷ் குணசேகர் இந்த படத்தில் முருகனுடன் இணைந்து கதை எழுதி உள்ளார்.

ஒரே இரவில் நடக்கும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. மூன்று வெவ்வேறு ரவுடி கும்பல்களுக்கு இடையில் நடக்கும் கதையை வித்தியாசமான முறையில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் முருகன். ஒருபுறம் கதாநாயகன் வெற்றி தான் காதலித்த பெண்ணை வீட்டிற்கு தெரியாமல் கூட்டி செல்கிறார். மறுபுறம் ஒரு ரவுடி தனது தங்கையை காணவில்லை என்று ஊர் முழுக்க தனது அடியாட்களை வைத்து தேடி வருகிறார். அதே சமயம் இவரைக் கொல்ல வேண்டும் என்று மற்றொரு கும்பல் ஆட்களை அனுப்புகிறது. இந்த மூன்று கதைகளும் இறுதியில் ஒரே இடத்தில் இணைகிறது.

கைதி போன்று ஒரே இரவில் நடக்கும் கேங்ஸ்டர் கதையை தனது பாணியில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் முருகன். ஆனால் அதில் வெற்றி பெற்றாரா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. படத்தின் கிளைமாக்ஸ்ல் வரும் ட்விஸ்ட் போல படம் முழுக்க யோசித்து வைத்திருந்திருக்கலாம். பல இடங்களில் கதை எதை நோக்கி செல்கிறது என்று புரியாமல் உள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் டீடைலிங் செய்ய தவறியுள்ளனர்.

போலீசாக வரும் சாய் தீனாவை வைத்து வரும் சில காட்சிகள் சிரிக்கும் படி இருந்தது. அதே போல படம் முழுக்க வரும் சண்டை காட்சிகளும் நன்றாக எடுக்கப்பட்டிருந்தது. ஸ்டண்ட் மாஸ்டர் ராம்குமாருக்கு தனி பாராட்டுக்கள். விவேக் சரோவின் இசையில் ஒரு பாடல் மற்றும் கேட்கும்படி இருந்தது, பின்னணி இசை படத்திற்கு ஏற்றார் போல் உள்ளது. நிறைய காட்சிகள் எடிட்டிங் கில் தூக்கி உள்ளனர் என்பது படம் பார்க்கும் போது நமக்கு அப்பட்டமாக தெரிகிறது, இதனை சரி செய்து இருந்தால் இன்னும் நல்ல ஒரு படமாக வந்திருக்கும்.

Leave a Response