மறைந்த தயாரிப்பாளர் கே.ராஜன் திருவுருவப் படம் திறப்பு: டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் நடத்திய நினைவேந்தல் கூட்டம்!

சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மறைந்த தலைவர் கே.ராஜன் திருவுருவப் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்: தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரையுலகினர் நெகிழ்ச்சி அஞ்சலி!

மறைந்த தயாரிப்பாளர் கே.ராஜன் திருவுருவப் படம் திறப்பு: டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் நடத்திய நினைவேந்தல் கூட்டம்!

துணிச்சலான குரலை இழந்துவிட்டோம்: மறைந்த விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன் நினைவேந்தல் கூட்டத்தில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் புகழஞ்சலி!

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரும், இயக்குநரும், சென்னை–செங்கல்பட்டு–காஞ்சிபுரம்–திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவருமான கே. ராஜன் (வயது 85) அவர்கள், 2026 மே 17 அன்று காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து, சென்னை–செங்கல்பட்டு–காஞ்சிபுரம்–திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில், சென்னையில் அவரது திருவுருவப் படத் திறப்பு மற்றும் அஞ்சலிக் கூட்டம் 06-06-2026 அன்று திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க வளாகத்தில் மிகுந்த உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில், வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தலைவரும் தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ் தலைமை தாங்கி, கோலிவுட்டின் மிகத் துணிச்சலான மற்றும் நேர்மையான குரலாக விளங்கிய கே. ராஜன் அவர்களின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து, மலர்தூவி மௌன அஞ்சலி செலுத்தினார்.

அவரைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ். தாணு, நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன், சங்கத்தின் நிர்வாகிகள் துணைத் தலைவர் பி. அந்தோணிதாஸ், இணைச் செயலாளர் எஸ். நந்தகோபால், பொருளாளர் யு. தருண்குமார், செயற்குழு உறுப்பினர்கள், அன்னாரின் குடும்பத்தினர் கே.ஆர். பிரபு, கே.ஆர். சுரேஷ் ராஜன், ராஜேஸ்வரி அன்பு, சங்க உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் சினிமா வர்த்தகத்தின் வெளிப்படைத்தன்மைக்காகவும் இறுதிவரை ஓங்கி ஒலித்த கே. ராஜன் அவர்களின் பங்களிப்பை, இக்கூட்டத்தில் கலந்துகொண்ட திரையுலகினர் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தனர்.

திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் பேசுகையில்,

“எந்த ஒரு மேடையிலும், எதற்கும் அஞ்சாமல் உண்மையை உரக்கப் பேசும் குணம் கொண்டவர் கே. ராஜன். சென்னை திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து, பல வர்த்தகச் சிக்கல்களைத் தீர்த்து வைத்தார். மேலும், சிறு தயாரிப்பாளர்கள் படும் நஷ்டம், நிதி நெருக்கடி மற்றும் விநியோகஸ்தர்களின் நஷ்டம் குறித்து தனது வாழ்நாளின் இறுதிவரை பொது மேடைகளில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர்” என புகழஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வில் தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ். தாணு பேசுகையில்,

“தயாரிப்பாளர்களின் நன்மைக்காக அனைத்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும் சரி, உரிமையாளர்களுக்கும் சரி, ராஜன் அவர்கள் எடுத்து வைத்த வாதங்களும் விவாதங்களும் எண்ணிலடங்காதவை. அப்படிப்பட்ட மனிதரின் மறைவு மிகப்பெரிய இழப்பு. திருட்டு விசிடிக்காக அவர் நடத்திய போராட்டங்கள், சட்டை இல்லாமல்கூட போராட்டம் நடத்திய துணிச்சல் — அவை யாருக்கும் எளிதில் வராது.

பலமுறை அவரிடம் சென்று உரையாடி இருக்கிறேன். என் எண்ணங்களை வெளிப்படுத்தி இருக்கிறேன். அவர் ஆற்றிய சமுதாயப் பணியும் சமூகப் பணியும் எண்ணிலடங்காதவை. நான் படித்த செஞ்சாரங்க பள்ளியில்கூட அவர் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.

அப்படிப்பட்டவர் இந்தத் திரையுலகிற்கு வந்து மாபெரும் எழுச்சியை உருவாக்கினார். சகோதரர் ஐசரி கணேஷை ‘மாப்பிள்ளை, மாப்பிள்ளை’ என்று அன்பாக அழைப்பார். அவரும் ‘மாமா, மாமா’ என்று அன்பாக அழைப்பார். அப்படிப்பட்ட அன்யோனியமான உறவை அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

அவருக்காக ஐசரி கணேஷ் எத்தனை சூழ்நிலைகளில் பக்கபலமாக இருந்து காத்தார் என்பது அவருக்கும் தெரியும், எனக்கும் தெரியும். அவர் வழியை இனிவரும் தலைமுறையினர் பின்பற்றி நடக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். அன்னாரது இழப்பு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறேன். நன்றி” என்றார்.

நிகழ்வில் நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் பேசுகையில்,

“அண்ணன் கே. ராஜனுக்காக எங்க வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எந்த சூழ்நிலையிலும் வரலாம். பல பிரச்சினைகளில் நான் அவருடன் நின்றிருக்கிறேன். எந்த சபையாக இருந்தாலும், ஏதாவது ஒரு விஷயத்தில் அவர் முரண்படுவார்; அதற்காக போராடுவார்.

சினிமாவில் இப்படிப்பட்ட ஒரு மனிதரைப் பார்க்கவே முடியாது. இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த சங்கத்தின் தலைவர், பொருளாளர், நந்தகோபால், என்னுடைய சகோதரர் ஐசரி கே. கணேஷ், தாணு சார் ஆகிய அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஏனெனில், இப்படிப்பட்ட தருணங்களில் எல்லோரும் வரமாட்டார்கள்; நல்ல உள்ளங்கள் மட்டுமே வருவார்கள்.

அவரது ஆத்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டு, இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய அனைவருக்கும் நன்றி” என்றார்.

கே. ராஜன் அவர்களின் மகள் ராஜேஸ்வரி அன்பு பேசுகையில்,

“நம்முடைய தமிழ் கலாச்சாரத்தில் மிகவும் புகழ்பெற்ற ஒரு வாக்கியம் இருக்கிறது — துணிச்சல், நேர்மை, போராட்டத் தகுதி; இந்த மூன்றும் பெற்றிருந்தால்தான் அவன் தமிழன் என்று சொல்வார்கள். அப்படி ஒரு தமிழனாக எங்கள் அப்பா இருந்தது எங்களுக்கு மிகப்பெரிய பெருமை; அது எங்களுடைய பாக்கியம்.

ஓல்டு வாஷர்மேன்பேட்டையில் இருந்தாலும், அவருடைய உயிர் இந்த மீரான் சாகிப் தெருவிலும், தயாரிப்பாளர் கவுன்சிலிலும்தான் இருக்கும். எந்த ஒரு பிரச்சினைக்காகவும், திரைப்படத்திற்காகவும் எதையும் எதிர்பார்க்காமல் ஓடி வரக்கூடிய ஒரே ஜீவன்.

எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பார்க்க மாட்டார்; எவ்வளவு பெரிய மேடை என்று பார்க்க மாட்டார்; தைரியமாக வந்து போராட்டக் களத்தில் நிற்பார்.

எப்போதெல்லாம் நான் தளர்ந்து போகிறேனோ, அப்போதெல்லாம் எனக்கு தோள் கொடுத்தவர். தைரியத்தை இழந்தபோது தைரியம் கொடுத்தவர்; வாழ்க்கையை இழந்தபோது வாழ்க்கையை கொடுத்தவர்; வாழக் கற்றுக்கொடுத்தவர். சொல்லால் அல்ல, செயலாலும் செய்து காட்டியவர்.

இன்று அவர் மறைந்திருந்தாலும், கண்களில் நீரோடு சொல்கிறேன் — அவருடைய தைரியம் என்றென்றும் எங்கள் குடும்பத்தாரின் ஒவ்வொருவரிடமும் இருக்கும். அவர் வழிகாட்டிய பாதைகளில் நாங்கள் கண்டிப்பாக செல்வோம்.

இந்த வாய்ப்பில் ஐசரி கணேஷ் அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஒரு தாய் மாமனாக என்னுடைய அப்பாவை கருதி, கடைசி வரை அவருக்காக செய்தது வேறு யாராலும் செய்ய முடியாத ஒன்று.

எங்கள் குடும்பத்தின் சார்பில், அவருடைய குடும்பத்தாருக்கு நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம். மற்றவர்களுக்கு நல்லதை செய்யும் குணம் வாய்ந்த ஒரு தமிழனாகவும், ஒரு ஆண்மகனாகவும் நான் பார்த்தது என் அப்பாவைத்தான். எல்லோருக்கும் அவரவர் அப்பாதான் முதல் ஹீரோ; எனக்கும் என் கே. ராஜன் அப்பாதான் ஹீரோ. தேங்க்யூ சோ மச்” என்றார்.

நிகழ்வில் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் பேசுகையில்,

“தயாரிப்பாளர் கே. ராஜன் மாமா அவர்களின் எதிர்பாராத மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகிற்கும், குறிப்பாக எங்கள் குடும்பத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.

நிறைய பேர் அவரைப் பற்றி பேசினார்கள். அவருடைய மகள் பேசும்போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. என்ன பேசுவது என்றே தெரியவில்லை. இருந்தாலும் நான் பேசியாக வேண்டும். ஏனெனில், எனக்கும் மாமாவுக்கும் இருந்த நட்பு சாதாரணமானது அல்ல.

என்னுடைய மறைந்த தந்தை ஐசரி வேலன் இறந்து கிட்டத்தட்ட 39 ஆண்டுகள் ஆகிறது. அவரும் கே. ராஜன் மாமாவும் வடசென்னையில் சர் தியாகராயா பள்ளியில் ஒன்றாகப் படித்த பள்ளித் தோழர்கள். நாடகங்களில் சேர்ந்து நடித்தார்கள். பள்ளிப் பருவத்திலேயே கதை எழுதுவார்கள், இயக்குவார்கள், நடிப்பார்கள் — எதைச் செய்தாலும் இருவரும் ஒன்றாகச் செய்வார்கள்.

மாமா வடசென்னையில் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியை நடத்தி வந்தார். இப்போது அதை அவரது மகளும் மகனும் கவனித்து வருகின்றனர். அந்தப் பள்ளிக்கே என் தந்தை சென்று அவருடன் அமர்ந்து பேசுவார்.

அப்போது ‘என்னைப் போல ஒரு பள்ளியை நீயும் ஆரம்பி’ என்று என் தந்தையிடம் ராஜன் மாமா கூறியிருக்கிறார். அதை மனதில் வைத்துக்கொண்ட என் தந்தை, பின்னர் அதை என்னிடம் கூறினார். அதையே நான் மனதில் வைத்து, அவர் மறைந்த பிறகு அவரது பெயரில் ஒரு கல்லூரியைத் தொடங்கினேன்.

இன்று 54 கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறேன். 50,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கிறார்கள்; 8,000-க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகிறார்கள். இதற்கெல்லாம் விதை போட்டவர் கே. ராஜன் மாமாதான் என்று நான் சொல்லுவேன்.

நான் 19 வயதில் இருக்கும்போதே அப்பா இறந்துவிட்டார். அதன் பிறகு நான் அவரை என் அப்பாவாகத்தான் பார்த்தேன். அவர் எதை கேட்டாலும் நான் செய்து கொடுப்பேன். வசதி இருந்தாலும், கஷ்டம் இருந்தாலும், அவரிடம் ‘இல்லை’ என்று நான் சொன்னதே இல்லை.

அவர் தேர்தலில் நிற்பார். ‘வேண்டாம் மாமா, எதற்கு நிற்கிறீர்கள்?’ என்று நான் கேட்பேன். ‘இல்லடா, நான் ஜெயிச்சிருவேன்டா’ என்பார். ‘ஜெயித்தால் சந்தோஷம்; தோற்கக்கூடாது’ என்று சொல்லி அதற்கும் உதவி செய்வேன். சில தேர்தல்களில் வென்றிருக்கிறார்; சிலவற்றில் தோற்றிருக்கிறார். ஆனால் கடைசிவரை தலைவராக இருந்தபடியே அவர் மறைந்தது ஒரு மனநிறைவைத் தருகிறது.

ஆனால் அவர் இப்படி மறைந்திருக்கக் கூடாது. அவரைப் போல தைரியமான ஒருவரை நான் பார்த்ததில்லை. அவரைப் பார்த்து எனக்கும் நிறைய தைரியம் வந்திருக்கிறது. எத்தனையோ பெரிய அறுவைச் சிகிச்சைகளை தைரியமாக எதிர்கொண்டவர், ஒரு சிறிய பேஸ்மேக்கர் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு இப்படி ஒரு முடிவை எடுப்பார் என்று நான் நினைத்ததே இல்லை.

இருந்தாலும், இன்று அவர் எப்போதும் எங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.

கே. ராஜன் மாமா, சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் நிதிப் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். தமிழ் சினிமாவின் நலனுக்காக, நேர்மையுடனும், துணிச்சலுடனும், அலாதியான அர்ப்பணிப்புடனும் இறுதிவரை போராடிய மாமனிதர்.

எந்த மேடையிலும் உண்மையை உரக்கப் பேசும் அவரது குணம், தமிழ் சினிமா வர்த்தக வரலாற்றிலும், சுயாதீனப் படைப்பாளர்களின் வரலாற்றிலும் என்றும் நிலைத்திருக்கும்.

இன்று இந்த சங்கத்தில் அவரது திருவுருவப் படத்தைத் திறந்து வைத்துள்ளீர்கள். அவர் இல்லாவிட்டாலும், அவர் இருந்தால் என்ன செய்திருப்பாரோ அதை நான் நிச்சயமாக செய்வேன் என்பதை இந்த சங்கத்திற்கு உறுதியளிக்கிறேன்.

எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஒட்டுமொத்தத் திரையுலகினருக்கும் என் மனமார்ந்த ஆறுதலையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என்று உருக்கமாகப் பேசினார்.

Leave a Response